பாகிஸ்தானில் இருந்து உருவாக்கப்பட்ட போலியான ஆரோக்கிய சேது செயலி பரவி வருவது குறித்து ராணுவ வீரரகள் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை மற்றும் உதவிகளுக்காக ‘ஆரோக்கிய சேது’ என்ற மொபைல் செயலியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செயலி உள்ளது. இதனை அனைத்து பொதுமக்களும் தங்கள் மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது.

இந்நிலையில் இந்திய ராணுவத்தினரிடம் இருந்து தகவல்களை திரட்ட பாகிஸ்தானால் இருந்து உருவாக்கப்பட்ட போலியான ஆரோக்கிய சேது ஆப் இணையதளங்களில் உலாவி வருகிறது என இந்திய ராணுவம், ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவத்தினரை எச்சரித்துள்ளது. வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் மூலம் பாகிஸ்தான் உருவாக்கிய போலியான ஆரோக்கிய சேது செயலி பரவி வருவதாகவும் அதை யாரும் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டாம் என்றும் படை வீரர்களை இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

ஒருவேளை தவறி பதிவிறக்கம் செய்தால் face.apk, imo.apk, normal.apk, trueC.apk, snap.apk and viber.apk போன்ற மால்வேரைகளயம் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்கிறது அந்த செயலி. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை தங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்து, தகவல்களை சேகரிக்கிறது.

இதற்கான சர்வர் நெதர்லாந்தில் இருப்பதாக காட்டுகிறது என்று ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் ஆரோக்கிய சேது செயலியை ‘mygov.in’ என்ற இணையதளத்தில் உள்ள லிங்கில் இருந்து மட்டும் டவுன்லோடு செய்து பயன்படுத்துமாறும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: பாதுகாப்பு இல்லாததா.. ‘ஆரோக்கிய சேது’ செயலி

முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்த செயலியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் பாதுகாப்பு அல்லது குறைவான பாதிப்பு என வந்தால் மட்டுமே அலுவலகம் வர வேண்டும். மிதமான அல்லது அதிக பாதிப்பு என பரிசோதனையில் தெரிய வந்தால் அலுவலகத்துக்கு வர கூடாது. வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.