கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
104 எம்எல்ஏ.க்கள் பலம் கொண்ட பாஜ, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக ‘ஆபரஷேன் தாமரை’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
 
இதன் மூலம், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்களை தங்களது கட்சிக்கு இழுக்க வலை வீசி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
 
இது தொடர்பாக மஜத எம்எல்ஏ நாகன கவுடாவிடம் கர்நாடகா பாஜ மாநில தலைவர் எடியூரப்பா, ரூ.10 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பேரம் பேசும் ஆடியோ ஆதாரத்தை முதல்வர் குமாரசாமி வெளியிட்டார்.
 
இதைத் தொடர்ந்து, இதே ஆடியோவை டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் மீண்டும் வெளியிட்டனர்.
 
இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஆடியோவில் இருப்பது தம்முடைய குரல் அல்ல என்றும் யாரையும் தாம் சந்திக்கவில்லை என்றும் எடியூரப்பா முதலில் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
 
 
இதனிடையே கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற குதிரை பேரம் பேசியது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.
 
ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என்றும் ஆனால் ஆடியோவை குமாரசாமி தமது வசதிக்கேற்ப மாற்றியுள்ளதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் சதன கவுடாவை சந்தித்ததையும் எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் எடியூரப்பா ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் குமாரசாமிக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த குழுவானது 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
 
இதன் முடிவால் எடியூரப்பாவில் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து வரும் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்