இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோ அதிக டிஸ்லைக்குகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த பாஜக டிஸ்லைக் பட்டனை ஆப் செய்து விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 20) மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில், ஊரடங்கு முடிந்து பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இந்தியாவில் திருவிழா காலம் என்பதால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கலாம். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வளர்ந்து வரும் நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், இந்தியாவை விட அதிகம். குணமடைவோர் விகிதமும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. நாடு முழுவதும் பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், பல லட்சம் சிகிச்சை மையங்களும் உள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்..

பிரதமர் மோடியின் பேச்சை பாஜக தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் நேரலை செய்தது. அப்போது, பிரதமர் பேசத் தொடங்கியதும் நூற்றுக்கணக்கானோர் டிஸ்லைக் பதிவிட்டனர். சில வினாடிகளில் இது 4500ஐ தாண்டியது. உடனடியாக பாஜக அந்த வீடியோவிற்கான லைக், டிஸ்லைக் பட்டன்களை ஆப் செய்து விட்டது. பணமதிப்பிழப்பு உள்பட பிரதமரின் பேச்சுகள் பலவும் மக்களிடம் எதிர்ப்பையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு 5.6 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஸ்லைக்குகளை வாங்கியதும் லைக், டிஸ்லைக் பட்டன்கள் ஆஃப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: நீட் முறைகேடு புகார்: 10, 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண், நீட் தேர்வில் ‘0’ மதிப்பெண்