10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. வட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாய் அக்ஷய், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வை எழுதிய அவர், கடந்த 6ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஓஎம்ஆர் ஷீட் நகலை பார்த்து, தமக்கு 517 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று மதிப்பீடு செய்திருந்தார். ஆனால், அவருக்கு பூஜ்யம் மதிப்பெண் வந்துள்ளதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

விடைத்தாள் நகலில் இருப்பது தமது கையெழுத்து இல்லை, அதில் எதுவும் நிரப்பப்படாமல் இருப்பது முறைகேடு நடந்துள்ளது என்பதை காட்டுகிறது என்று கூறி உள்ளார். இது குறித்து மாணவரின் உறவினர் முத்துக்குமார் கூறுகையில், முடிவுகள் வெளியானவுடன் ஓஎம்ஆர் ஷீட் நகலை வாங்கி பார்த்தோம். அது சாய் அக்ஷய் உடையது இல்லை என்றார்.

இதேபோல் சென்னை பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், 410 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் பூஜ்யம் மதிப்பெண்கள் கிடைத்துள்ளது என்று வேதனை தெரிவித்து உள்ளார். அரியலூம் மாணவி மஞ்சுவும் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வில் தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: காவல்துறையில் வேலைவாய்ப்புகள்