காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை இன்று 2வது முறையாக சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், நாளை (27.07.2022) மீண்டும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கினார். அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் அக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவன பங்குகள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

இதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பியது. ராகுல்காந்தி கடந்த மாதம் 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் மொத்தம் 53 மணி நேரம் விசாரணை நடந்தது.

மேலும் சோனியாகாந்தி கடந்த மாதம் 8 ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஜூலை 21 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, அன்றைய தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜராகி 2 மணி நேரம் பதில் அளித்தார்.

பின்னர் ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று (26.7.2022) சோனியா காந்தி மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானதையடுத்து அவரது இல்லம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலக பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் அடுத்தடுத்து விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பாராளுமன்ற வளாகம் முதல் விஜய் சவுக் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். இதனையடுத்து, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நாளை (27.7.2022) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.