நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தில் ஒருவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டால் என்ன செய்வது, பிரிவு 49P. என்றால் என்ன என்பது பற்றி விளக்கமாக கூறப்பட்டு வைரலாகி வந்தது. தற்போது இது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் தேசிய அளவில் பேசப்பட்டது. சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம், கதை திருட்டு என்று இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சைகள் அதிகரித்தது. இவற்றை எல்லாம் மீறி படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இப்படம் அரசுகளை கடுமையாக விமர்சித்தும், அரசு கொடுக்கும் இலவசங்களை வீதியில் போட்டு உடைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இக்காட்சிகள் வெளியான பின்னர் விஜய்யின் ரசிகர்களும் தங்களது வீட்டில் இருந்த இலவசப் பொருட்களை வீதியில் போட்டு உடைத்த சம்பவங்களும் நடந்தன. சர்ச்சைக்குப் பின்னர் அக்காட்சிகள் நீக்கப்பட்டன.

மேலும் இப்படத்தில் 49P என்றால் என்ன என்பதற்கான விளக்கமும், அதாவது ஒருவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டால், வாக்கை இழந்தவர் என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது.

பிரிவு 49P தான், தற்போது தேர்தல் ஆணையமும் விளம்பரப்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையம் தனது விளம்பரத்தில், ”உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்து விட்டால் கவலை வேண்டாம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிகரிக்கப்பட்ட ஏதேனும் ஆவணத்தை காட்டி வாக்கு செலுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.

இது தங்களது தளபதி விஜய்க்கு கிடைத்த வெற்றி என்று அவரது ரசிகர்கள் #49P டிரண்டாக்கி வருகின்றனர்.