கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே ஏற்பட்ட மண்சரிவால் கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் வந்த 1,850 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 54 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வழக்கத்தைவிட 77 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர் சேலம் தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று (11.11.2021) மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இன்று காலை 4 மணியளவில் தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே ரயில் வந்தது.

அப்போது மழை காரணமாக மலைப்பாதையில் இருந்த பாறைகள் திடீரென ரயில் பெட்டிகள் மீது விழுந்தன. இதில் 6 பெட்டிகள் மீது விழுந்ததால் ரயில் தடம்புரண்டது. இதனைத்தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மலையில் இருந்து உருண்ட பாறைகள் தண்டவாளத்தில் கிடந்தன.

மேலும் பெட்டிகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு, பேருந்துகள் மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெங்களூரு ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீஷ்யாம் சிங் தலைமையில் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மீட்பு குழுவினரும் வந்தனர்.

மேலும் ரயிலில் 7 பெட்டிகள் மாற்று என்ஜீன் மூலம் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் 4 பெட்டிகள் தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பாறைகள் விழுந்து கிடக்கும் 6 பெட்டிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரயில் தடம் புரண்ட விபத்தில் ரயில் இருந்த 2348 பயணிகளும் காயம் எதுவுமின்றி உயிர்தப்பினர்.

நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் தவித்தனர். பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் குறித்து தகவல்களை பெற தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.