தமிழ் சினிமாவில் குறைந்தது வாரம் ஒரு படம் திரைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், இம்மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 20ம் தேதி சீதக்காதியும், 21ம் தேதி மாரி 2, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது. மேலும், பூமாராங் 28ம் தேதியும் வெளியாகிறது. மாஸ் ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வருவதால் ஹீரோக்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நேரத்தில், மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதைத் தடுக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் கலந்து கொண்டனர். அதில், தங்களது படங்களின் வெளியீட்டுத் தேதியை யாருமே மாற்றியமைக்க உடன்படவில்லை. அதனால், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையில், தயாரிப்பாளர்கள் அவரவர் விருப்பப்படி படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு காரணம், மாரி 2 படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கனா படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், அடங்க மறு படத்தின் தயாரிப்பாளர் ஜெயம் ரவியின் மனைவி குடும்பத்தினர் என்று ஹீரோக்களே அவரவர் படங்களுக்கு தயாரிப்பாளர்களாக இருப்பதால், ஒருவரும் விட்டுக் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், 2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அனைத்து சங்கங்களும் இடம் பெறும் ஒரு கூட்டத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த உள்ளதாகவும், அந்த கூட்டத்தின் போது பொங்கலுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஒவ்வொரு படத்தையும் முறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கு உடன்படாத தயாரிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சற்றும் எதிர்பாராத இந்த அறிவிப்பு, வளர்ந்து வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் படங்களுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலை மீறி தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் நடப்பதாகவும், விதியை பின்பற்றுபவர்களுக்கு இங்கே நியாயம் கிடைக்காது எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஷாலுக்கு மிகவும் நெருக்கமான நடிகரான விஷ்ணு விஷாலின் இந்த பதிவு புதிய படங்கள் வெளியீட்டு விவகாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு மத்தியில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதுதாக கூறப்படுகிறது.