தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனவும், தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றைய தினத்தில் உறுதிமொழி எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், “பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்று அறப்பால் தந்த ஐயாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வருக்கு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த எங்கள் பெருமைமிகு முதல்வருக்கு நன்றிகள்.

திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்கள் திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் அவர்கள் வாரணத்தின் நான்கு கால்களை பேரரங்கம் அதிர முழங்கினார். முழக்கங்கள் தொடர்கின்றன முயற்சிகள் வெல்கின்றன” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

சர்வதேச விருதுகளை வென்ற சூரரைப் போற்று; வைரலாகும் Unboxing வீடியோ!