சா்வதேச அளவில் 2021 ஆம் ஆண்டில் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது பற்றிய கணக்கெடுப்பில், முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

சா்வதேச அளவில் விமான போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளை லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ள சிரியம் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

அந்நிறுவனம், 2021 ஆம் ஆண்டில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடுகள், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பாடு, வருகை பற்றி விரிவான ஆய்வு நடத்தி, ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

மொத்தம் 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில் 70 வழித்தடங்ககளில் 81.90 சதவீதம் விமானங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில் பெரிய விமான நிலையங்களை கருத்தில் கொள்ளப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் 2021 ஆம் ஆண்டில் பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு விமான நிலையம் 96.51 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை விமானநிலையம் 89.32 சதவீதம் பெற்று 8வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே குறித்த நேரத்தில் விமானப் புறப்பாட்டை உறுதி செய்ததில் சர்வதே அளவில் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அந்த தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களில் இந்திய விமானநிலையங்களில் சென்னையை தவிர வேறு எந்த விமானநிலையங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.