எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாய் இருக்க வேண்டிய தருணம் இது. இன்றைய காலகட்டத்தில் அவ்வபோது வேண்டியதை மட்டும் சமைத்து சாப்பிடும் காலத்தை கடந்துவிட்டோம். சமைக்கும் உணவு பதார்த்தங்கள் நாள்கணக்கில், வாரக்கணக்கில் கெட்டுபோகாமல் காப்பாற்ற எல்லோரு வீட்டிலும் அத்தியாவசிய பொருளான ஃப்ரிட்ஜ் இருக்கிறது.

சத்து தரும் பொருள்களாக இருந்தாலும் அதை மீண்டும் சூடுபடுத்தும் போது அவை சத்தை இழந்து நஞ்சாகவே மாறுகிறது. அப்படி சூடுபடுத்த கூடாத உணவு பொருள்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

சாதம்: Foods standards Agency (FSA) தகவலின்படி, நம் அன்றாட உணவில் பிரதானமாக இடம்பெறும் சாதத்தை காலை ஒரு வேளை வைத்துவிட்டால் மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் அதை சூடு செய்து உண்பதன் மூலம் அதன் சத்துக்கள் இழக்கப்படும்.

பிரியாணி: சிலர் பிரியாணி, கலந்த சாதங்கள் அதிகமாக இருக்கும் போது ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள் இவற்றில் நிச்சயம் நச்சுத்தன்மை மிகுந்திருக்கும். குறிப்பாக அசைவம் கலந்த பிரியாணியில் ஆபத்து இருப்பதால், ஃப்ரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கீரை: இரும்புச்சத்து தரக்கூடிய கீரை, உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இதை சமைத்த பிறகு மீண்டும் சூடு செய்து பயன்படுத்தும் போது, கீரையில் இருக்கும் நைட்ரேட் ஆனது நைட்ரைட்டாக மாறுகிறது. இவை புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளில் ஒன்று. குறிப்பாக குடல் புற்றுநோயை உண்டாக்க கூடும். மேலும் இரவு நேரங்களில் கீரையை சாப்பிடும் போது அவை செரிமானக்கோளாறுகளை உண்டாக்கும் வாய்ப்புகளும் அதிகம். எந்த கீரையாக இருந்தாலும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது.

உருளைக்கிழங்கு: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு பொருள் இது. உருளைக்கிழங்கில் வைட்டமின் பி 6, சி மற்றும் பொட்டாசியம் சத்துகள் உள்ளது. உருளைக்கிழங்கை சமைத்தபிறகு அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் மீண்டும் சூடு செய்யும் போது அவை க்ளோஸ்ட்ரிடியம் போட்டுலினியம் என்னும் நஞ்சை உருவாக்குகின்றன. இதன் காரணமாக உடல் நல குறைபாடு, ஒவ்வாமை உணர்வும் ஏற்படும். உருளைக்கிழங்கு போன்றே இதர கிழங்கு வகைகளையும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடகூடாது.

கோழி இறைச்சி: புரதச்சத்து தேவை எனில் கோழி இறைச்சியை எடுத்துகொள்ளலாம். ஆனால் கோழி இறைச்சியை முதல் நாள் சமைத்து மீண்டும் மறுநாள் சூடு செய்யும் போது அதிலிருக்கும் புரதமானது மாறுகிறது. இவை ஃபுட் பாய்ஸனாக மாறி செரிமானசிக்கலையும் ஏற்படுத்துகிறது.

கோழி இறைச்சியை சமைக்காமல் வைத்திருந்தால் ஈகோலி மாதிரியான பாக்டீரியாக்கள் உருவாகும். அதே போன்று நன்றாக சமைக்காவிட்டாலும் இந்த பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிடும். நன்றாக சமைத்த கோழி இறைச்சியை மீண்டும் சூடு படுத்தினாலும் அவை உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

முட்டை: சாதாரணமாக செரிமானக்கோளாறு உள்ளவர்களுக்கு முட்டை அலர்ஜி. அப்படி இருக்கும் போது புரதச்சத்து நிறைந்த முட்டையை வேக வைத்து, பொரித்து அவை மீதமிருக்கும் போது மீண்டும் சூடுபடுத்தினால், அதிலிருக்கும் நைட்ரஜன் ஆக்ஸிஜனேற்றப்பட்டு தீங்கு விளைவிக்கும் நச்சை வெளியேற்றும். இதனால் செரிமானக்கோளாறை அதிகப்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறை உண்டாக்கும். மேலும் புற்றுநோயை ஏற்படுத்தும்.

காளான்: உடனடியாக சமைத்து சாப்பிடகூடிய பொருளில் காளானும் ஒன்று. காளானிலும் புரதம் அதிகம் உள்ளது. இதை முழுமையாக பெற உடனே சாப்பிடவேண்டும். இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமானக்கோளாறுகள் உருவாவதோடு வயிறு உபாதைகளையும் உண்டாக்கும். காளானை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சமைப்பவர்கள் உடனடியாக சமைக்காமல் இரண்டு மணி நேரம் வெளியே வைத்து பிறகு சமைக்க வேண்டும்.

பீட்ரூட்: காய்கறிவகைகளில் பீட்ரூட் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, ஃபோலேட் சத்துகளை கொண்டிருக்கிறது. ரத்த அணுக்களின் அளவு சீராக இருக்க பீட்ரூட் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். பீட்ரூட்டை சமைத்து மீண்டும் சூடுபடுத்தும் போது இதில் இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு நஞ்சை வெளிப்படுத்துகிறது. அதனால் காய்கறிகளில் பீட்ரூட்டையும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தகூடாது.

சமையல் எண்ணெய்: சமைக்கும் போது எண்ணெய் பயன்படுத்தி பொரித்த பிறகு எஞ்சியிருக்கும் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தும் போது எண்ணெயின் அடர்த்தி அதிகரிக்க தொடங்கும். இவை இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாக்க காரணங்களாக அமைந்துவிடுகிறது. அதனால் எஞ்சியிருக்கும் எண்ணெயையும் 5 நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். பொதுவாக எண்ணெயை அதிகம் சூட்டுக்கு உள்ளாக்காமல் சமைப்பதே சிறந்தது.

டீ, காபி: வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மொத்தமாக டீ மற்றும் காபி போட்டுவைத்து தேவைப்படும் போது சூடேற்றி கொடுப்பது சுவையை மாற்றிவிடும். சமயத்தில் வயிற்றுப்போக்கையும் உண்டாக்கிவிடும். மாறாக பிளாஸ்க்கில் ஊற்றிவைக்கலாம். அல்லது டிகாஷனையும் பாலையும் தனியாக வைத்து வேண்டியபோது சூடாக்கி கலந்து கொடுக்கலாம்.

பொதுவாக உணவை அவ்வபோது சமைத்து சூடாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக மேற்கண்ட உணவுகளை எப்போதும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது. இனி சமைக்கும் போது இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.