மதுரையில் 1.45 கோடி கள்ளநோட்டு பறிமுதல் செய்த வழக்கில் தலைமறைவான குற்றத்தடுப்பு காவல்பிரிவு சார்பு ஆய்வாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் தீவிர குற்றத்தடுப்பு காவல் பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஆனந்த். இவர் வாகனச் சோதனையில் 2 கார்களில் 3 மூட்டைகளில் கொண்டுச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தார்.

இந்தப் பணத்தை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், திருமங்கலம் காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் ஆனந்த் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதனையடுத்து ஆனந்த் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்து 1.45 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஆனந்த் மனு தாக்கல் செய்தார். மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இன்று (16.03.2023) விசாரித்தார்.

இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், மனுதாரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. கள்ளநோட்டு கும்பலிடம் பறிமுதல் செய்த 25 லட்சத்தில் 16 லட்சத்தை மட்டும் காவல் நிலைய கணக்கில் காட்டியுள்ளார். மீதமுள்ள 9 லட்சத்தை அவரே வைத்துக் கொண்டார். அதில் 8 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

நகை திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்த நகைகளை உரிமையாளர்களிடம் முழுமையாக திரும்ப வழங்காமல் இருந்துள்ளார். திருட்டு நகைகளை வாங்கியவர்களை மிரட்டி 15 லட்சம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளதால், ஆனந்த்க்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதனையடுத்து ஆனந்த் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.