கரூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார்.
 
இதற்கிடையே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணையப் போவதாகவும், அக்கட்சி தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வருகிற 16-ந் தேதி சென்னையில் நடைபெறும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
ஆனால் இது குறித்து செந்தில்பாலாஜி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த, பழனியப்பன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
 
இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது. இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
 
இது தினகரன் தரப்பை அதிர செய்துள்ளது என்கிறது அக்கட்சி வட்டாரம் ..