91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்றது. விழாவில் பல்வேறு பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இந்திய-ஈரானிய திரைப்பட இயக்குனர் ராய்கா ஜேடாப்ச்சி இயக்கத்தில் மாதவிடாய் பற்றி உருவாக்கப்பட்ட “ப்ரீயட் என்ட் ஆஃப் சென்டென்ஸ் (Period- End of sentence)” என்கிற இந்தியாவில் தயாரான ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்பட பிரிவில் விருது வென்று பெருமையை தேடித் தந்துள்ளது.

மாதவிடாய் குறித்து இந்தியப் பெண்களிடையே நிலவும் தவறுதலான புரிதல், கற்பித்தலை கருப்பொருளாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதி பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் பின்பற்றி வந்தனர்.

இதற்கு மாற்று வழியாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நேப்கின்களை குறைந்த விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுப்பிடித்து அதற்கான காப்புரிமையை பெற்று குறைந்த விலையில் தரமான அணையாடையைப் (நேபின்கள்) தயாரித்து விற்கிறார்.

முருகானந்தத்தின் இந்த முயற்சி பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்த பெண்களுக்கு வரப்பிராசதமாக அமைந்தது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. முருகானந்தத்தின் கண்டுபிடிப்பை பல நிறுவனங்கள் வாங்க முன்வந்த போதும், விற்க மறுத்துவிட்டார்.

இவரது முயற்சியை கருப்பொருளாக வைத்து ‘பீரியட். எண்ட் ஆஃப் சென்டென்ஸ் (Period- End of sentence)‘ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குறு ஆவணப்படம், இந்தியாவின் ஊரகப் புறத்தில் வசிக்கும் பெண்கள் பலர், மாதவிடாய் காலங்களில் இன்னமும் துணிகளை மட்டுமே பயன்படுத்தும் உண்மை தெரிவிக்கிறது. மேலும், மாதவிடாய் என்றால் என்ன என்றே தெரியாத ஆண்களின் மனநிலையையும் பதிவு செய்துள்ளது.

தொடர்பு செய்திக்கு: 2019 ஆஸ்கார் விருது பட்டியலில் கோவைத் தமிழனின் ஆவணப்படம்