தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் ஊராட்சிகள் தவிர்த்து, கிராம ஊராட்சிகளில் வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு செப்டம்பர் 20 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) என வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும்.

கடைசியாக கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 26, 2020 அன்று நடத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த 6 முறைகளாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

தற்போது, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் காரணமாக தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மற்றும் இதர மாவட்டங்களின் தேர்தல்கள் நடைபெற உள்ள ஊராட்சிகளையும் தவிர்த்து பிற ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.

கிராம சபை கூட்டங்கள் நடத்திடும்போது அரசு விதித்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுவதுமாக பின்பற்றிட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கிராம ஊராட்சிகளை வழிநடத்திட வேண்டும்.

கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கும்போது, ஊரகவாழ் மக்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த தனிநபர் இடைவெளியைப் பின்பற்றியும் மற்றும் இதர வழிகாட்டு நெறிமுறைகளையும் சிறிதும் வழுவாமல் கடைப்பிடித்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு; கல்வி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்