மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று (31.01.2023) தொடங்கியது. இதனைத்தொடர்ந்து மக்களவையில் இன்று (01.02.2023) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதியமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு முடிவு

சாலைகள், நெடுஞ்சாலைகள், மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்க 9.98 லட்சம் கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 33% அதிகமாகும்.

அதிகபட்சமாக ரயில்வே திட்டங்களுக்கு 1.96 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. 50 புதிய விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட 66% அதிகமாக, 81,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் வருவாய் பற்றாக்குறையை 0.5% குறைக்க மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய வருவாய் பற்றாக்குறை 6.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக குறைக்கப்படும். 2025-26-ம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட் 2023-24ல் எதிர்பார்க்கப்பட்டபடியே வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு. அதேபோல் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை- 5 சதவீத வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)
ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை – 10 சதவீத வரி,
ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை – 15 சதவீத வரி,
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை – 20 சதவீத வரி,
ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி.

அதிக வேலைவாய்ப்பின்மையும், கூலி கொடுப்பதில் தாமதமும் நிலவும் நிலையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 30 சதவீதம் குறைத்துள்ளது.

உணவு மானியத்தில் 30 சதவீதம் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு, கொரோனா கால இலவச உணவு தானியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் 20 சதவீதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உரம் வாங்க விவசாயிகள் அதிக பணம் செலவழிக்கும் நிலை உருவாகக் கூடும்.

அதேநேரத்தில், வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.

மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய திட்டம் வகுக்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன். மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.

ஒன்றிய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும்.

ஊராட்சிகள், வார்டுகள் வாரியாக நூலகம் உருவாக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும். அந்த நூலகங்களை தேசிய டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகள் செய்யப்படும்.

பான் கார்டுகள் – வர்த்தகத்தில் பொது அடையாள அட்டை. பான் கார்டுகளை அரசு நிறுவனங்களின் டிஜிட்டல் பயன்பாட்டின் போது பொது அடையாள அட்டையாக பயன்படுத்த மத்திய பட்ஜெட்டில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. டிஜி லாக்கர் பயன்பாடு பரவலாக்கப்படும்.

நாடு முழுவதும் 100 பொறியியல் கல்லூரிகளில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கான செயலிகளை உருவாக்க ஆய்வகங்கள் நிறுவப்படும்.

செயற்கை நுண்ணவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தொலைநோக்கு அடிப்படையில் 3 நகரங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் சால் மையம் உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது. புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.