பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வாழையடியைச் சேர்ந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறையின் திட்ட இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தினசரி ஊடக சந்திப்பின் மூலம் மக்களிடையே பிரபலமானார் பீலா ராஜேஷ். இருப்பினும், தமிழக சுகாதார துறை செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பல கோடி மதிப்பீல் பண்ணை வீடு கட்டியுள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் பீலா ராஜேஷ் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ரூ.27 லட்சம் வாடகை வருவாயாக குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கான சொத்து ஆதாரம் இல்லை என்றும் வாங்கிய 6 சொத்துகளை குறிப்பிட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை, பீலா ராஜேஷ் மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

மேலும் வாசிக்க: தரமில்லாத ஹெல்மெட் அணிவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பதை விட ஆபத்து…