வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, விசாரணை முடியும் வரை இந்த ஒதுக்கீட்டில் புதிய நியமனங்கள் மற்றும் மாணவர் சேர்க்கையை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியின் போது அவசர அவசரமாக வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சட்டம் இயற்றியது.

இந்த ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. இதனையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னியர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதை செய்யாமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்?

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று கூறி தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல் செய்தது. அதேபோல் பாமக உள்பட மேல்முறையீடு செய்த 12 மனுக்கள் மீதான வழக்கு இன்று (16.12.2021) விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், “வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை இந்த ஒதுக்கீட்டில் புதிய நியமனங்கள் மற்றும் மாணவர் சேர்க்கையை செய்யக் கூடாது” என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.