தரமில்லாத ஹெல்மெட் அணிவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பதை விட ஆபத்தானது என வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம்.

விபத்தில் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வதே மிக முக்கிய காரணமாக கூறி, இந்தியாவில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசின் மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129 கூறுகிறது. தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3376 ஆக உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதேசமயம், ஹெல்மெட் அணிந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் தரமில்லாத ஹெல்மெட்டுகளை அணிவது என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் விற்கப்படும் ஹெல்மெட்டுகள் 1.2 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும் என்று பிஐஎஸ் தர நிர்ணயம் விதித்தது. ஆனால், இந்த நிபந்தனையால் தரமில்லாத ஹெல்மெட்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டதால், 2018 ஆம் ஆண்டு இந்த நிபந்தனை நீக்கப்பட்டு ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்டுகள் 1.5 கிலோ எடையுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

எனினும், விலை குறைவாகக் கிடைப்பதால் தரமில்லாத ஹெல்மெட்டுகளை வாங்கி அணிவதால் பல்வேறு பாதிப்புகள் மற்றும் விபத்து பலி எண்ணிக்கையும் உயர்வதாக அண்மையில் ஒரு கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், பிஐஎஸ் தரச் சான்றிதழ் இல்லாத ஹெல்மெட்களை விற்பனை செய்வது குற்றச் செயல் என அறிவித்துள்ளது.அதேபோல் தரமில்லாத ஹெல்மெட் அணிவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பதை விட ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா; இந்தியாவில் 18 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு