சமூக சேவகர் அன்னா ஹசாரே நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை சமூக சேவைக்காக அளிக்காமல் அவரே அபகரித்துக் கொண்டதாக எழுந்துள்ள புகாரில் அன்னா ஹசாரே, மாநில அரசு மற்றும் சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழலுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

மேலும், ஊழலை ஒழிப்பதற்காக லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே தொடர்ந்து கோரிக்கை விடுத்தார். இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.

இதனையடுத்து மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஏற்பட்டது. ஆனால், அதன்பின்னர் அன்னா ஹசாரே அரசியலில் இருந்து காணாமல் போனார். இதன் காரணமாக அவர் பாஜகவுக்கு மறைமுகமாக வேலைபார்த்தார் என்றும், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதே அவருக்கு வழங்கப்பட வேலை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் இருந்த கிரண் பேடி பாஜகவில் இணைந்த நிலையில், மற்றொரு தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சியை தொடங்கி தற்போது இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளார். இது இரண்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்களாகும்.

தற்போது சொந்தக் கிராமத்தில் ஓய்வு எடுத்து வரும் அன்னா ஹசாரேவுக்கு ஒன்றிய பாஜக அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இந்நிலையில்தான், மகாராஷ்டிர மாநிலம், ராலேகன் சித்தி எனுமிடத்தில் சொந்தமாகத் தொண்டு நிறுவனம் நடத்திவரும் அன்னா ஹசாரே மீது நிதி மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அன்னா ஹசாரே நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை சமூக சேவைக்காக அளிக்காமல் அவரே அபகரித்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அன்னா ஹசாரே ‘ஹசாரே ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட்’ என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி மாநில அரசிடமும் 65 லட்சம் ரூபாயை வாங்கி அதனை அபகரித்து கொண்டதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி அந்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரிக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது, அன்னா ஹசாரே, மாநில அரசு மற்றும் சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம்,

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதா… வேண்டாமா என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தவும் சம்மதித்துள்ளது. இதன்மீதான விசாரணை 4 வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.