உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே மண்ணில் புதைப்பட கூடும் என இஸ்ரோ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் ஜோஷிமத் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரத்தை சுற்றியுள்ள மலை பகுதியில் கடந்த சில நாட்களாக திடீர் என நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.

நிலநடுக்கம்,பெருமழை போன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்காத நிலையில், நிலச்சரிவுகள் ஏற்பட்டது அந்த நகர மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாளாக நாளாக நிலைமை மோசமடைந்துள்ளது. சில வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், வேறு சில வீடுகளின் கட்டிடங்களும் விரிசல்விடத் தொடங்கியுள்ளது.

இதனால் உத்தராகண்ட் அரசு அங்கு அறிவியலாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அந்த நகரமே சில நாட்களில் மண்ணில் புதைந்து விடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த நகரில் இருப்பவர்களை மீட்கும் பணியில் அரசு முழு வீச்சில் இறங்கியது.

ஆனால் அதற்குள் அந்த நகரத்தை பிற பகுதிகளோடு இணைக்கும் சாலைகள் உடைந்து மண்ணில் புதையத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில், 570க்கும் அதிகமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மண்ணில் புதைந்து வரும் நகரத்தில் சிக்கியிருக்கும் மக்களை நிலம் வழியாக மீட்கமுடியாது என்பதால் மீட்புப்பணியில் 5 ஹெலிகாப்டர்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. எந்நேரமும் அந்த நகரமே மண்ணில் புதையலாம் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்புக்கு இடையே இந்த நகரை போலவே மற்றொரு கிராமமும் மண்ணில் புதையும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டின் கர்ணபிரயாக் நகரில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பகுகுணா நகரில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிற இடங்களில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே புதைப்பட கூடும் என இஸ்ரோ ஆய்வில் தெரியவந்துள்ளது. உத்தரகாண்டின் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைகோள் புகைப்படத்தில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே புதைப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நிலம் சரியும் நிகழ்வானது கிட்டத்தட்ட 8.9 செ.மீ. அளவுக்கு இருந்ததாகவும், அதேநேரம் டிசம்பர் முதல் ஜனவரி வரை இந்த நிலசரிவின் வேகம் அதிகரித்து 12 நாட்களில் 5.4 செ.மீ அளவுக்கு சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.