வரும் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.
 
தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவாகியுள்ளதாகவும், அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது இனிமேல்தான் முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோருடன் இன்று மாலை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.
 
கடந்த இரு ஆண்டுகளாக போராட்டங்களிலில் எங்களுடன் தோழமையாக இருந்த அனைத்துக் கட்சிகளுடனும் பேசி, அக்கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும் என செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறினார்.
 
எந்தெந்த தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது குறித்து ஆராய திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது என்று தெரிவித்த அவர், பிற கட்சிகள் அவ்வாறே அமைத்துள்ள குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் திமுக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகதான் போட்டியிடும் என அதன் கூட்டணி கட்சிகளுடன் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மட்டுமே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
 
அந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின்பே இது குறித்து முடிவாகும் என ஸ்டாலின் கூறினார்.
 
2004ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இரண்டு இடதுசாரி கட்சிகள் இருந்தன. மகா கூட்டணியாக இது அப்போது பார்க்கப்பட்டது.
 
அப்போது திமுக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், இரு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி பா.மகவுக்கு ஒதுக்கப்பட்டது.
 
அந்த தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அந்தக் கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
 
மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. திமுக மற்றும் பா.ம.க ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தன.
2009 தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே திமுக அங்கம் வகித்தது.
 
அப்போது பாமகவும் மதிமுகவும் வெளியேறியதால் காங்கிரஸுக்கு 15 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் திமுகவால் ஒதுக்கப்பட்டன.
 
திமுக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் , விடுதலை சிறுத்தைகள் 1 தொகுதியிலும் வென்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது.
 
ஆனால் 2014இல் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி வைக்காமல் தனி தனியே களம் கண்டன. காங்கிரஸ் அனைத்து தொகுதியையும் இழந்தது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகியவை இருந்தன. திமுக கூட்டணியும் அனைத்து தொகுதிகளையும் இழந்தது.