மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு கிராமத்தில் நாள்தோறும் பள்ளிக்கு 24 கி.மீ. சைக்கிளில் சென்று வந்த 10ஆம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வில் 98.5% மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளது. அதில், அம்மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள 1200 பேர் வசிக்கும் அஜ்னோல் கிராமத்தை சேர்ந்த ரோஷினி பதௌரியா எனும் மாணவி 98.5% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும், மத்திய பிரதேச இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ஆம் வகுப்பு தேர்வுகளின் தகுதி பட்டியலில் மாநில அளவில் 8ஆவது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தையும், விவசாயியுமான புருஷோத்தம் கூறுகையில், “எனது மகள் ரோஷானி எங்களது கிராமத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்தாள். அங்கு சென்று வர போக்குவரத்து வசதி கிடையாது. எனவே, பல நாட்கள் பள்ளிக்கு சைக்கிளிலேயே எனது மகள் சென்று வந்தார்.

அஜ்னோல் கிராமத்தில் வேறு யாரும் இதுபோன்று இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றதில்லை என்பதால் அக்கிராம மக்கள் அனைவரும் ரோஷினியை நினைத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தெரிவிக்கும் புருஷோத்தம், தனது மகளின் இந்த சாதனை தன்னை பெருமை படுத்தியுள்ளதாகவும், விரைவில் அவருக்கு போக்குவரத்து வசதிக்கு மாற்று ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு சைக்கிள் பயணம் தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட மாணவி ரோஷினி, “சைக்கிளில் செல்வது மிகவும் கடினமாக இருக்கும். எனது தந்தைக்கு நேரம் கிடைக்கும் போது மட்டும் அவரது இரு சக்கர வாகனத்தில் என்னை பள்ளிக்கு அழைத்து செல்வார். தற்போது பெற்றுள்ள மதிப்பெண்கள் கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடித்துவிட்டது. குடிமை பணிகள் தேர்வில் தேர்ச்சியடைந்து ஐஏஎஸ் ஆவதே தனது கனவு” என்றும் தெரிவித்துள்ளார். ரோஷினியின் பள்ளி தலைமை ஆசிரியரும், அக்கிராம மக்களும் மாணவியின் சாதனை, மனஉறுதியைப் பாராட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க: 2021.க்கு முன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லையா..