மதுரை தனியார் கல்லூரியில் நடந்த ராகிங் கொடுமையால் விஷம் குடித்து 2 மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவலைக்கிடமான நிலையில் மேலும் ஒரு மாணவர் தீவிர  சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக சீனியர் மாணவர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
மதுரை பீபீகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் முத்துப்பாண்டி (18). அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் பழனிக்குமார் (18). செல்லூரை சேர்ந்தவர் பாரத் (18).  மூவரும் தெப்பக்குளம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் ஒரே  வகுப்பில் பிஏ முதலாமாண்டு படித்துள்ளனர்.
 
கடந்த 5 நாட்களுக்கு முன் இவர்களை, சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மூவரும் வெளியே விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி  விழுந்தனர்.
 
இதனையடுத்து பெற்றோர் 3 பேரையும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் பாரத் சிகிச்சை பலனின்றி சம்பவ நாளிலேயே இறந்தார்.
 
நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.  கவலைக்கிடமான நிலையில் பழனிகுமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக முத்துப்பாண்டியின் தாய் சித்ராதேவி, நகர் போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமாரிடம் நேற்று புகார் அளித்தார்.
 
புகாரில், எனது மகன் முத்துபாண்டியுடன் படிக்கும் ஜெயசக்தி உள்ளிட்ட சீனியர் மாணவர்கள் தொடர்ந்து ராகிங் செய்து வருவதாக அடிக்கடி எங்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
 
நாங்கள் விசாரிப்போம் என்று கூறிய  நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டார். ராகிங் கொடுமை செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து மாணவர் ஜெயசக்தி மீது தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  ராகிங் கொடுமையால் 2 மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்தனர். இதுதொடர்பாக மாணவர்கள் அளித்த  புகாரின்பேரில் 20 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 
தற்போது இந்த ஆண்டும் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் தற்கொலை தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடமும் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.