முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக பிஎச்.டி படிப்பில் சேரும் புதிய திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உயர்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் அடிப்படையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பல்கலைக்கழக மானியக் குழு சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் முடித்த உடன் முதுநிலை பயிலாமல் நேரடியாக பிஎச்.டி (Ph.D) படிப்பில் சேரும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இளநிலை பட்டபடிப்பு 3 ஆண்டுகள் நடைமுறையில் உள்ள நிலையில், 4 ஆண்டுகால இளங்கலை பட்ட படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 4 ஆண்டுகால இளநிலை படிப்பில் விருப்பத்தேர்வாக முதுநிலை படிப்பும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகால படிப்பினை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும் படிக்கலாம் என யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி வழியிலும் 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படிக்கலாம் எனவும்,

4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் எப்போது விரும்பினாலும் இடைநிற்றல் (Discontinue) செய்து பின் மீண்டும் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

உயர்கல்வித் துறையில் இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.