நாகாலாந்தில் பணி முடிந்து வீடு திரும்பிய சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் என்று சந்தேகத்தின்பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகாலாந்து மாநிலம் மியான்மர் எல்லையருகே உள்ள மான் மாவட்டத்தில் உள்ள ஒட்டிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து அவர்கள் நேற்று மாலை ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மான் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங் ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில் கூலித் தொழிலாளர்கள் வந்த வேன் சத்தத்தை கேட்டதும், பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து அண்டை மாநிலமான அசாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போது தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ, இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. தவறுதலாக சுடப்பட்டது தொடர்பாக உயர் மட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் நாகாலாந்து முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் தாக்குதலில் இராணு வீரர் ஒரு உயிரிழந்துள்ளதால், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என அசாம் ரைபிள்ஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “நாகலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து, உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும். எங்கள் சொந்த நிலத்தில் பொதுமக்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ பாதுகாப்பாக இல்லாதபோது உள்துறை அமைச்சகம் என்ன சரியாக செய்கிறது?” என்று கடுமையாக சாடியுள்ளார்.