பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் (யுபிஏ) காரணம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 9 நாட்களில் வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் முதல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ச்சியாக தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று (30.3.2022) காலை பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 106 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 96.76 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசினார். அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்த அவர், “ரஷ்யா யுக்ரேன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இது முற்றிலும் உண்மையல்ல. கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்வு காணப்படுகிறது. சர்வதேச விலைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்படி கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும். வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்கள். அப்போது, வெறும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள் தான் வெளியிடப்பட்டன. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு பாண்டுகளை வழங்கியது தான் தற்போதய தொடர்ச்சியான பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.