தேசிய பங்குச்சந்தை ஊழலில் ஈடுபட்ட சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக செபி குற்றஞ்சாட்டியது மிகப் பெரிய சர்ச்சையானது.

இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில், தேசியப் பங்குச்சந்தையின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசியங்கள் என பலவற்றையும் இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவருடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டது உறுதியானது.

இதனையடுத்து சித்ரா ராமகிருஷ்ணாவிற்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன், சிஓஓ ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக மும்பை சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் மற்றும் முன்னாள் செயலாக்க அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 25 ஆம் தேதி சென்னையில் கைது செய்தனர்.

இதனையடுத்து சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 5.3.2022 அன்று முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் நேற்று (6.3.2022) கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவரை இன்று (7.3.2022) டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவிடம் வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, 7 நாட்கள் சித்ரா ராமகிருஷ்ணாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.