ஆர்.எஸ்.எஸ்ஸை இந்தியா நாடு முழுவதும் தடை செய்தவர் படேல் என்று ஆதாரத்துடன் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது

நாட்டின் முதல் துணைப் பிரதமரும், இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 மீட்டர் உயர பிரமாண்டமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி புதனன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் உலகின் மிகப் பெரிய சிலையாக சர்தார் வல்லபபாய் படேல் சிலை நேற்று படேல் பிறந்த நாளில் திறந்து வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைவிட (93 மீட்டர்) இரு மட ங்கு உயரமாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் கரையோரத்தில் சர்தார் சரோவர் அணை அருகில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை நாட்டுக்கு அர்பணிக்கும்போதும், அதன் அருகே, வால் ஆஃப் யூனிட்டியும் (ஒற்றுமையின் சுவர்)-திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பின்போது இந்திய விமானப் படை விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில் பாஜகவின் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸை நாடு முழுவதும் தடை செய்தவர் படேல் என்று ஆதாரத்துடன் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

பாஜகவின் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ் நாடு சுதந்தரம் பெற்றவுடன் 1948-ல் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேலால் இந்தியா முழுமைக்கும் தடை செய்யப்பட்டது. அது தொடர்பான பழைய செய்தித்தாள் குறிப்பு ஒன்றுடன், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு:

சர்தார் பட்டேல் மட்டும் இப்போதுஉயிருடன் இருந்திருந்தால், நாட்டின் நலனுக்காக அவர் மற்றுமொரு உறுதியான முடிவை எடுத்திருப்பார்.
ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் சித்தாந்தமும் நாட்டின் அடையாளத்திற்கு பெரிய ஆபத்தை உண்டாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.