#MeToo என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலமான இந்த மீடூ இயக்கம், தமிழ்நாட்டிலும் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இதில் திரைத்துறையை சார்ந்தவர்களே அதிகம் குற்றச்சாட்டிற்க்கு ஆளானவர்கள்.

#MeToo சர்ச்சை தொடர்பாக ஆலோசிக்க, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் நாசர் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், “திரைத்துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ளன.

எனினும், நடிகர் சங்கத்தின் சுயமரியாதையை காப்பாற்றும் விதமாக, நீதிமன்ற வழிகாட்டுதலன் படி, விசாகா கமிட்டி அடிப்படையில் ஒரு பெரும் குழு அமைக்கப்படும். பெரும்பான்மையாக பெண்கள் அங்கம் வகிக்கும் அந்த குழுவில், மனநல மருத்துவரும் இடம்பெறுவார். ஆண்கள், பெண்கள் என வேறுபாடின்றி, பிரச்னைகளை பொதுவாக பேசும் தளமாக அது இயங்கும்.

திரைத்துறையில் பணியிடங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உடண்டியாக தீர்வு காணு வகையில் இந்த குழுவின் செயல்பாடுகள் அமையும். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது” என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்தார்.