படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகைகள் பாதுகாப்புடன் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியதை தொடர்ந்து, திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் பலர், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களை #MeToo மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

#MeToo இயக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், படப்புத்தளங்களில் கலைஞர்கள் சுதந்திரமாக செயல்பட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, திரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மனஅழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக சுயமரியாதையோடு தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலை தக்க வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்க குழு ஒன்றையும் அமைக்கும் என்பதை தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துக் கொள்வதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.