ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரியின் கதை தெலுங்கு சினிமாவில் திரைப்படமாகிறது.

கடந்த சில வருடங்களாக இந்திய சினிமாவில் பயோபிக் படங்கள் எடுப்பது பிரபலமாகி வருகிறது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வரலாறான ‘rocketry – the nambi effect’, ‘Shakuntala Devi -The Human Computer’ என்ற பெயரில் பிரபல கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு, அக்‌ஷய் குமார் நடிப்பில் மன்னர் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு என பல படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது பிரபல பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை. 2000 வருடத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் வெண்கல பதக்கம் வென்றார். அது மட்டுமின்றி உலக சாம்பியன்ஷிப் உட்பட பல போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார் கர்ணம் மல்லேஸ்வரி.

நேற்று கர்ணம் மல்லேஸ்வரியின் 45வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக அவரது பயோபிக் படத்தை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தெலுங்கு தயாரிப்பாளர் கோனா வெங்கட்.

‘Journey of a girl, who lifted the nation’ என்று போஸ்டர் வெளியிட்டு, அவரது பிறந்தநாளான இன்று, நாங்கள் பெருமையுடன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண், கர்ணம் மல்லேஸ்வரியில் வாழக்கை வரலாற்று படம் குறித்து அறிவிக்கிறோம். பல மொழிகளில் இந்தியா முழுவதும் சென்று சேரும் வகையில் உருவாகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

ராஜூகாடு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சஞ்சனா ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். இதுபற்றி பேசிய கோனா வெங்கட், “இந்த கதை தற்போதைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருக்கும். ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் அளவுக்கு சாதித்த அவரது வாழ்க்கை உண்மையில் மிகப்பெரியது.

இது எளிதாக கிடைத்த ஒன்று அல்ல. இந்த அளவுக்கு உயர அவர் பல பிரச்சனைகளையும் சந்தித்துள்ளளார். அவரிடம் பேசும்போது வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினார். அதை படமாக்கவும் அனுமதி கொடுத்தார்” என கூறியுள்ளார். கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவது யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க: தாயை இழந்த குழந்தைக்கு உதவிக் கரம் நீட்டிய ஷாருக்கான்