நெல்லையில் திமுக சார்பாக போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்த அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று (12.10.2021) காலை 8 மணிக்கு துவங்கி, 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றி பெற்றுள்ளன. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. அதேபோல இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமகவும் மோசமான தோல்வியையே சந்தித்துள்ளது.

இந்நிலையில் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் டெபாசிட் இழந்தனர். மேலும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்ற பெருமாத்தாள் தனது முதுமை மிளிரும் சிரிப்புடன் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுச் சென்றார். அவருக்கு கூடியிருந்த அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பெருமாத்தாள், “வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி. தனது ஊராட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் கடல்மணி வெற்றி பெற்றார்.

தேர்தலில், கடல்மணி, கன்னியம்மாள் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். கன்னியம்மாள் 423 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கடல்மணி 424 வாக்குகளும் பெற்றனர். இதில் கடல்மணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதே போல மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.