இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றினர். தமிழ்நாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேசியக் கொடியை கோட்டையில் ஏற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதற்கு உரிமை பெற்றுத் தந்த கலைஞர் கருணாநிதிக்கு நன்றி.

இன்று நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மாதத்துக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா, மதுரைக்கு வந்த காந்தி அரையாடை அணிந்த நூற்றாண்டு விழா, வஉசி 150வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு அரசு விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.

புரட்சிக்கவி பாரதி மறைந்து நூறாண்டுகள் ஆகிறது. இவ்வாறாக இந்த ஆண்டு பல்வேறு புகழ் கொண்டது. இருப்பினும் தனிப்பட்ட முறையில், இந்த ஆண்டு 6வது முறையாக திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதில் எனக்குப் பெருமிதம்.

விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித் தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தில்லையாடி வள்ளியம்மை, திருவிக, நாமக்கல் ராமலிங்க, பாரதிதேசன், திருப்பூர் குமரன், ஜீவா, கேப்டன் லக்‌ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள் எனப் பல தலைவர்களின் மூச்சுக் காற்றால் கட்டப்பட்டது தான் இந்த சுதந்திர நினைவுத் தூன். இவர்கள் தமிழக தியாகிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள்.

தியாகிகளைப் போற்றும் மண் தமிழ்நாடு. அந்த வகையில், தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வுத்தொகையை ரூ.18000 ஆக உயர்த்துகிறது. குடும்ப ஓய்வூதியம் மேலும் ரூ.ஆயிரம் அதிகரிக்கப்பட்டு ரூ.9000 மாக வழங்கப்படும் என்பதை பெருமிதத்தோடு அறிவிக்கிறேன்.

சீன அச்சுறுத்தலின் போது நாட்டுப் பாதுகாப்புக்காக ரூ.6 கோடி நிதி வழங்கியவர் கருணாநிதி. அப்போது, நாடு முழுவதுமிருந்து மொத்தம் திரட்டப்பட்டது 25 கோடி ரூபாய். அதில் தமிழகம் மட்டும் ரூ.6 கொடி நிதி வழங்கியது. அதேபோல், கார்கில் போரின் போது 3 தவணைகளாக ரூ.50 கோடி நிதி வழங்கப்பட்டது என்பதை நினைவு கூர்கிறேன்.

மேலும் கொரோனா நமக்கு நிறைய படிப்பினை கொடுத்திருக்கிறது. மருத்துவ, பொருளாதார, சூழல் நெருக்கடி எனப் பல நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது. அதனை சமாளிக்க உதவிய சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு நான் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இன்று 101வது நாள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. ரூ.4000 நிதியுதவியை மக்களுக்கு இரு தவணைகளாக வழங்கியிருக்கிறது. 14 பொருட்கள் கொண்ட மளிகைப் பொருட்கள் தொகுப்புப் பை வழங்கப்பட்டுள்ளது.

பால், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளோம். மகளிர், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அன்னைத் தமிழில் அர்ச்சணை செய்யலாம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டுள்ளது.

3 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு. கிண்டியில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைடை ரூ.250 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சமூகம், அறிவியல், பொருளாதாரம் மூன்றிலும் தமிழ்நாடு ஒருசேர வளர வேண்டும் என்பதே கனவு. அதை நிறைவேற்ற உழைக்கிறோம். மனித உரிமை கொண்ட சமூகமாக மாற வேண்டும் என நினைக்கிறோம். அந்த வகையில், மேன்மைமிகு தமிழ்நாட்டை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வரி குறைப்பு எதிரொலி: ரூ.100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை!