சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ‘ப்ளட் மூன்’ என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
 
வரும் ஜனவரி 20ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்க பூர்வகுடி மக்கள் குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிலவை ‘வுல்ஃப் மூன்’ என அழைத்து வருகின்றனர். இந்த ‘வுல்ஃப் மூன்’ வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்திய நேரப்படி ஜனவரி 20ந் தேதி நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை வரை இது நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என கூறப்படுகிறது.
 
ஆசியாவில் பல இடங்களிலும் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டின் வானில் நிகழும் முதல் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.