பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இது தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161ன் படி தமிழக அமைச்சரவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார்.

இதனிடையே பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். மேலும் இந்த விடுதலை தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உள்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என இன்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது அறிவிப்பில், “ஆளுநர் மறுதலிப்பு என்பது பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நிலைபாடுதான். பாஜக ஆட்சிக்குவந்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை மூடநம்பிக்கையே என்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இவர்கள் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர்” என்று தெரிவித்து உள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்