கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 61,561 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18,000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1932 ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி. டாடாவால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா, சுதந்திரத்திற்கு பிறகு அரசுடமையாக்கப்பட்டது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாக நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கப் போவதாகவும், அதற்கான ஏலத்தில் பங்கேற்கவும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறின.

டாடா உள்ளிட்ட ஒன்றிரண்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஒன்றிய அரசு அந்த செய்தியை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமத்தின் டேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 18,000 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக ஒன்றிய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 61,561 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த மொத்த கடனில் ரூ.15,300 கோடி ரூபாய் செலுத்துவதற்கான பொறுப்பினை டாடா நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ளது.

மீதமுள்ள ரூ.46,260 கோடி ரூபாயை செலுத்த வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பாகும். ஏர் இந்தியா விற்பனையிலிருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.2,700 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். மேலும் ஏர் இந்தியா விற்பனையால் ஏற்படும் இழப்பு மக்கள் மீது சுமத்தப்படமாட்டாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ரத்தன் டாடா தனது பதிவில், “வெல்கம் பேக் ஏர் இந்தியா என குறிப்பிட்டு, டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தனது தாத்தாவுமான ஜே.ஆர்.டி. டாடா ஏர் இந்தியா விமானம் முன் இருக்கும் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ஏர் இந்தியா ஏலத்தில் டாடா குழுமம் வென்றுள்ளது மகிழ்ச்சி. ஜே.ஆர்.டி. டாடா தலைமையில் இருந்தபோது உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்தது ஏர் இந்தியா. அந்தப் பெருமையையும் மதிப்பையும் மீண்டும் டாடா குழுமம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் பழையபடி நிலைநிறுத்திவைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதேசமயத்தில் விமானத் துறையில் டாடா நிறுவனம் வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும் என்றும் நம்புகிறோம். இந்த நேரத்தில் ஜே.ஆர்.டி.டாடா இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.