கடந்த 30 ஆண்டுகளில் தற்போது நடந்த லோக்சபா தேர்தல் தான் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணைந்து விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2019 லோக்சபா தேர்தல் தான் 30 ஆண்டுகளில் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். லோக்சபா தேர்தல் தொடர்பாக 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் நடந்த ஆபத்தான முரண்பாடுகள் குறித்து 20 பக்க விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த அறிக்கையில், “தேர்தலின் போது பாஜகவினரின்ர் மற்றும் மோடி, அமித்ஷாவின் எந்த ஒரு தேர்தல் நடத்தை விதி மீறல்களையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை.

மோடிக்காகவே லோக்சபா தேர்தல் தேதியும் தாமதமாக வெளியிடப்பட்டது. மோடி நலத்திட்ட உதவிகளை அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் காத்திருந்தது அபத்தமானதாகும்.

ஒரு கட்சி சார்புடையதாக தேர்தல் ஆணையம் தம்மை வெளிப்படுத்திக் கொண்டது. தேர்தல் ஆணையத்தின் உயரிய மரபுகள் சரிந்து போனது பெரும் கவலைக்குரியது. தேர்தலை 3 மாதங்களாக நடத்தியது மக்கள் மனதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மீதான எந்த ஒரு தேர்தல் புகார் குறித்தும் தேர்தல் ஆணையம் விசாரணையே நடத்தவில்லை. ஒவ்வொரு புகார் வந்த போதும் மோடி தேர்தல் விதிகளை மீறவே இல்லை என நற்சான்று பத்திரம்தான் கொடுத்தது தேர்தல் ஆணையம்.

சட்டவிரோத குடியேறிகளை வங்கக் கடலில் தூக்கி எறிவோம் என பாஜக தலைவர் அமித்ஷா பேசியதை தேர்தல் நடத்தை விதி மீறலாக கருதவில்லை. நீதிமன்றம் குட்டு வைத்த பின்னரே தமக்கான அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்தது.

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதற்காக முகமது மோசின் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது. அதே நேரத்தில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது ஹெலிகாப்டர்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என அறிக்கையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.