தெலுங்கானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடத்துனர் பரமேஸ்வர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள கொண்டகட்டு என்ற இடத்தில் இருந்து ஜகித்யாலாவுக்கு அம்மாநில அரசு போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெத்த பல்லி, ராம்சாகர், ஹிம்மத்பேட்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள், முதியோர், மாணவர்கள் என சுமார் 80 பேர் பயணித்தனர்.

அவர்களில் கொண்டகட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்களும் பெரும்பாலானோர் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் நின்றுகொண்டே பயணித்தனர். காலை 11 மணி அளவில் வளைவுகள் நிறைந்த கொண்டகட்டு மலைப்பாதையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் மலைப்பாதையில் இருந்து பஸ் சமதளத்துக்கு வரவிருந்த நிலையில் எதிர்பாராத விபத்து நடந்தது.

கடைசி வளைவு அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு ஆட்டோ மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் அதே வேகத்தில் பக்கவாட்டில் இருந்த வேகத்தடை மீது ஏற்றினார். இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. பக்கவாட்டில் இருந்த 30 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 4 முறை உருண்டு நின்றது. இதில் பல பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கிவீசப்பட்டு உடல் சிதறினர். பஸ்சுக்குள் இருந்தவர்கள் இருக்கைகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கினர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர், ஆம்புலன்சுகளுடன் மருத்துவர்கள் விரைந்தனர்.

அவர்கள் காயமடைந்த சுமார் 30 பேரை மீட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். இதில் செல்லும் வழியிலும், ஆஸ்பத்திரிகளிலும் 12 பேர் இறந்தனர். தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பஸ் டிரைவர் சீனிவாசனின் 2 கால்களும் துண்டானது. அவருக்கு ஜகித்யாலா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில், பேருந்து விபத்து குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடத்துனர் பரமேஸ்வர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறிய விவரம் ” ஜகத்யாலா மலைப்பகுதி மிகவும் அபாயகரமானது என்றும் இங்கு பேருந்து சேவைக்கு உகந்தது அல்ல என்றும் அதிகாரிகளிடம் பலமுறை எச்சரித்தேன். விபத்து நிகழ்ந்த போது ஓட்டுனர் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆசிலேட்டரை அழுத்திருக்கலாம். கடந்த வாரம் தான் சிறந்த ஓட்டுனருக்கான விருதை சீனிவாசராவ் பெற்றதாகவும், ஆனால், தற்போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்து விட்டதாகவும் நடத்துனர் பரமேஸ்வர் வருத்தமுடன் கூறினார்.