அமேசான் இந்தியா நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு காத்திருப்பதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அகில் சக்சேனா தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் நாடே நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளாகவே முடங்கிப்போய் உள்ளனர். ஊரடங்கு மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. போக்குவரத்துகளும் தொடங்கப்பட இருக்கின்றன.

ஊரடங்கின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். உலகின் பல முன்னணி நிறுவனங்களும் பொருளாதார சிக்கலில் இருக்கின்றன.

இந்நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியா 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறது. ஏற்கெனவே 1 லட்சம் ஊழியர்களை பணிக்கு அமர்த்திய அமேசான் நிறுவனம் மீண்டும் ஆட்களைச் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பேட்டியளித்துள்ள அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அகில் சக்சேனா, “இந்திய வாடிக்கையாளர்களுக்கு இக்கடினமான நேரத்தில் உதவ விரும்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் தனிமனித இடைவெளியை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே அவர்களுக்கு முழுமையான சேவையை வழங்க 50 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம். இது இந்தியா முழுமைக்கானது. அப்போதுதான் எங்களது வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: பதற வைக்கும் பாகிஸ்தான் பயணிகள் விமான விபத்து-107 பேர் பலி