கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தென்மேற்கு பருவமழையால் வெள்ளக்காடாகியுள்ளது. கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது.

அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 350க்கு மேலானோர் உயிரிழந்துள்ள நிலையில்,7 லட்சம் பேருக்கு மேல் முகாமில் தஞ்சமாகி இன்னும் ஆயிரக்கணக்கானோரை சென்றடைய முடியாத அவல நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் பருவமழை பெய்வது குறைந்துள்ளதால், இந்தியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரளாவில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கேரளா மாநில அரசு கடும் வெள்ள பாதிப்பு அடைந்ததை அடுத்து அம்மாநிலம் முழுவதும் வைஃபை இணைப்பை இலவசமாக வழங்கிவருகிறது. மீட்புபணி மற்றும் உறவினர்களுக்கு தங்களது இருப்பை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல காரணங்களுக்காக தற்காலிகமாக இந்த வசதி செய்துதரப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் சுங்க கட்டண சாவடியில் இரண்டு நாட்களுக்கு மக்களிடம் எவ்வித கட்டணமும் வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி குவிந்துவருகிறது. தெலங்கானா மாநில முதல்வர் 25 கோடி நிதியை உடனடியாக கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு வந்தவண்ணம் உள்ளது.

அதுபோல், கல்லூரி விடுதி ஒன்றில் உணவு, தண்ணீர் இல்லாமல் பரிதவித்த சில மாணவிகள், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கர்ப்பிணி ஒருவரும் சிறுவர்வர்கள் பலரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.

மீட்புப்பணிக்கு சென்ற இடத்தில், மீட்கப்பட்ட பெண்கள், படகை அடைவதற்காக, ஒரு வீரர் தண்ணீருக்குள் குனிந்தபடி நிற்க, அவரது முதுகில் மிதித்தபடி அப்பெண்கள் படகை அடைந்த காட்சி, மெய்சிலிர்க்க வைத்தது.

எர்ணாகுளம் பகுதி இதுவரை கடும் வெள்ளத்தை சந்தித்ததில்லை என்பதால் வெள்ளம் வந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் கிட்டத்தட்ட அனைவருமே வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளனர்.

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாலக்குடி மற்றும் கொச்சிக்கு இடையில் உள்ள அங்கமாலி நகராட்சியில் கிட்டத்தட்ட முழு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மின்சாரம், குடிதண்ணீர் உள்ளிட்டவை கிடைக்கின்றன.கேரளாவின் மற்ற பகுதிகளில் இன்னமும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் எடுத்துச்செல்ல இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

செங்கனூரில் 5 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதால் அதிக மீட்புதவி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள நிலைமையை தொலைக்காட்சியில் விவரித்த உள்ளூர் அரசியல்வாதி சாஜி செரியன் மனம் உடைந்து அழுதார்

நேற்று மட்டும் இரண்டு லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு நன்றி. அவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரை மீட்டதாக செய்திகள் வந்துள்ளன. போற்றப்படாத நாயகர்கள் – மீனவர்கள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- “ கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும். லட்சக்கணக்கான வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.