பல்வேறு மேடை நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்ற சீனு மோகன் (வயது 61) இன்று காலை உடல் நலக் குறைவால் காலமானார்.

மேடை நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய சீனு மோகன் 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு, குறும்படங்களிலும் நடித்துள்ளார். கிரேஸி மோகனின் “கிரேசி கிரியேஷன்ஸ்” நாடகக்குழுவில் 1979-ம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1989-ல் வருஷம் பதினாறு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்தார். 2016ல் இறைவி படத்தில் நடித்திருந்தது பலரால் பாராட்டப்பட்டது. மேலும், தலைவாசல், ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் செக்கச்சிவந்த வானம்.

இதுதவிர மர்மதேசம், மது +2, மதில் மேல் மது உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனு மோகன் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கு 29.12.2018 (சனிக்கிழமை) அண்ணாநகரில் நடைபெறவிருப்பதாக கிரேஸி மோகன் தெரிவித்துள்ளார்.