பிரபஞ்ச அழகி பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெற்று தந்திருப்பதை நான் மிக பெருமையாக கருதுகிறேன் என பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து தெரிவித்துள்ளார்.

70வது பிரபஞ்ச அழகி பட்டத்திற்கான போட்டி, இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.

இதில் தென்னாபிரிக்கா, பெருகுவே நாடுகளின் அழகிகளுடன் நடைபெற்ற கடைசி கட்ட போட்டிகளுக்கு பின், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் கவுர், கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார். பெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 விருதை வென்ற பின் இந்திய அளவில் கவனம் பெற்றார். இதனையடுத்து இந்தியா சார்பாக இந்த வருடம் இஸ்ரேலில் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார்.

இதற்கு முன் இந்தியா சார்பில் 1994 ஆம் ஆண்டு சுஷ்மிதாசென் மற்றும் 2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா இருவரும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றனர். அதன்பிறகு 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும் ஹர்னாஸ் கவுருக்கு சமுக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பின் ஹர்னாஸ் கவுர் சாந்து பேசுகையில், “நான் இந்த பட்டம் வென்றதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெற்றோர்களும், மிஸ் இந்தியா அமைப்பு நிர்வாகிகளும் எனக்கு வழி காட்டினார்கள்.

சர்வதேச போட்டியில் பங்கேற்க அனைத்து துறைகளிலும் என்னுடன் இருந்தவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தந்தனர். எனக்காக லட்சக் கணக்கானவர்கள் பிரார்த்தனை செய்தனர். நான் பட்டம் வெல்ல வேண்டும் என்று அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்புமிக்க இந்த பிரபஞ்ச அழகி பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெற்று தந்திருப்பதை நான் மிக பெருமையாக கருதுகிறேன்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகி பட்டம் வெல்லக் காரணமான அந்த ஒரு கேள்வி..

இந்தியாவின் ஹர்னாஸ் கவுர், பிராகுவே நாட்டை சேர்ந்த 22 வயது இளம் பெண் நதியா பெரிரியா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் லலிலா ஸ்வானே ஆகிய 3 அழகிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதிச்சுற்றில் பிரபஞ்ச அழகியை தேர்வு செய்வதற்கான கடைசி நிகழ்ச்சியாக கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது.

3 அழகிகளிடமும், “இன்றைய இளம் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து வெற்றி பெறுவது எப்படி என்று உங்களிடம் யோசனை கேட்டால் அவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்வீர்கள்?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் பதில் அளிக்கும் போது, “இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிகப்பெரிய நெருக்கடியாக இருப்பது அவர்கள் தங்களை தாங்களே நம்பாததுதான். தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு இளம் பெண்ணும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்வதை முதலில் இளைஞர்கள் நிறுத்த வேண்டும்.

இன்று உலகம் முழுக்க என்ன நடக்கிறது என்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள வேண்டும். நெருக்கடியில் இருந்து வெளியே வந்து உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ளுங்கள்.

ஏனெனில் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் தலைவர். உங்கள் குரல்தான் உங்களுக்கு சொந்தமானது. அதை தைரியமாக வெளிப்படுத்துங்கள். நான் என்னை நம்புகிறேன். அதனால்தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்” என்று ஹர்னாஸ் கவுர் பதில் அளித்தார்.

ஹர்னாஸ் கவுரின் இந்த பதிலுக்கு அரங்கில் திரண்டு இருந்த அனைத்து போட்டியாளர்கள் உட்பட நடுவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இந்திய அழகியின் பதில் பிராகுவே, தென் ஆப்பிரிக்கா அழகிகளின் பதிலை விட மிகவும் அழகாகவும், ஆத்மார்த்தமாகவும் இருந்ததாக பேசப்பட்டது.