ஆண்கள் ஜாக்கிரதை படத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக 2000 முதலைகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இப்படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஆண்கள் ஜாக்கிரதை படத்தின் இயக்குனர் முத்து மனோகரன் பேசும்போது, இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை கூறுகின்றோம். இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது.

ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.

கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க பயங்கரமாக இருக்கும். இப்படத்தின் ஹைலைட் அந்த காட்சி தான். படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புது வித திரில் அனுபவம் தரும் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.