லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆசிரமம் பள்ளியில் கடந்த 13 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என பணியாற்றிவரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் உயர்ந்த நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மனைவி லதா ரஜினிகாந்த், சென்னை கிண்டியில் ஆசிரமம் என்கிற பள்ளியை நடத்தி வருகிறார். 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில், சுமார் 69 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்த பள்ளி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த வருடம் லதா நடத்தும் ஆசிரமம் பள்ளி காலி செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ரூபாய் 1.99 கோடி வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு, அதற்கு லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் தந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 13 மாதங்களாக பள்ளியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என கூறி, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் அனைவரும் திடீரென பள்ளி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆசிரமம் பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியபோது, நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும் கடந்த 13 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 4 ஆண்டுகளாக ஊக்க தொகையும் போடவில்லை என தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் கஷ்டத்தில் இருக்கும்போது கூட பள்ளி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும், லதா ரஜினிகாந்திடம் பலமுறை முறையிட்டும் சரியான பதில் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நினைத்தால் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல், தங்களின் இந்த நிலைக்கு முழு காரணம் லதா ரஜினிகாந்த் என ஊழியர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி மீது இதுபோன்ற புகார் எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் செய்த பணிக்கு நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள்!