தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கிய மார்ச் 24-ஆம் தேதி முடிவடைந்தது. இவர்களில் பள்ளி மாணவர்களாக 7,79,931 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவியர்கள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் அடங்குவர்.

மார்ச் 24-ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 2020 நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மார்ச் ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாணாக்கர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்: dge1.tn.nic.in, tnresults.nic.in

தேர்ச்சி விகிதம்: மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள்- 92.3%, மாணவியர்- 94.80%, மாணவர்கள்- 89.41%

பள்ளிகள் தேர்ச்சி சதவிகிதம்: அரசு பள்ளிகளில் 85.94% தேர்ச்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சி, மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சி, இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72% தேர்ச்சி, பெண்கள் பள்ளிகள் 94.81% தேர்ச்சி, ஆண்கள் பள்ளிகள் 83.91 தேர்ச்சி.

தமிழக அளவில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சி பெற்றுள்ளது. இதையடுத்து ஈரோடு 96.99%, கோயம்புத்தூர் 96.39% தேர்ச்சி பெற்றுள்ளன.

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2835. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2506. தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 50.

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி:
அறிவியல் பாடப் பிரிவுகள் 93.64%
வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.96%
கலைப்பிரிவுகள் 84.65%
தொழிற்பாடப்பிரிவுகள் 79.88%

பாடங்களில் தேர்ச்சி:
கணிதம் 96.31%
இயற்பியல் 95.94%
வேதியியல் 95.82%
உயிரியல் 96.14%
தாவரவியல் 93.95%
விலங்கியல் 92.97%
கணினி அறிவியல் 99.51%
வணிகவியல் 95.65%
கணக்குப் பதிவியல் 94.80%