12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்களை 1,200 மாணவர்கள் இணைந்து கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதனை கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புத்தக நிறுவனங்களும் பதிவு செய்ய உள்ளன.

ராமேஸ்வரத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குரூப் கம்பெனி ஆகியவை இணைந்து மாணவர்கள் மூலம் செயற்கைகோள் கண்டுபிடிப்பு நிகழ்வு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

செயற்கைக்கோள் வடிவமைக்கும் பணியில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 1,200 பேர் சேர்ந்து 100 விதமான செயற்கைக்கோள்களை கண்டுபிடித்துள்ளனர்.

மாணவர்களால் உருவாக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட 100 செயற்கைக்கோள்களும் இன்று (பிப்ரவரி 07) ராமேசுவரம் ராமர் பாதம் அருகே உள்ள மைதானம் ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ராட்சத பலூன் மூலம் வானில் பறக்கவிடப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாணவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள்களுடன் கூடிய பலூன் ஏவுதல் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரமோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் தலைவர் சிவதாணுபிள்ளை, அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத், ஷேக் சலிம், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் உள்ளிட்ட கலாம் குடும்பத்தினரும் மற்றும் இந்த செயற்கைகோள்களை கண்டுபிடித்த இந்தியா முழுவதும் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 1000 மாணவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறியபோது, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 100 பள்ளிகளில் உள்ள 1,200 மாணவர்கள் சேர்ந்து 100 செயற்கை கோள்களை கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே மிகவும் குறைந்த எடை கொண்ட 12 கிராம் எடையிலான செயற்கைக்கோள் முதல் 60 கிராம் எடை வரையிலான செயற்கைக் கோள் வரையிலும் மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த 100 செயற்கை கோள்களும் பலூனின் அடிப்பகுதியில் கட்டப்பட்டு வானில் பறக்கவிடப்பட உள்ளன.

இந்த செயற்கைக்கோள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை, காற்றின் வேகம், வானிலை, கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ராமேசுவரத்தில் நாளை 100 செயற்கைக்கோளுடன் வானில் பலூன் பறக்கவிடும் நிகழ்வை கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புத்தக நிறுவனங்களும் பதிவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 செயலிக்கு தடை: தமிழக அரசு