10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் அதிகரித்து நிலையில் இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்களால் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் வாசிக்க: செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்.. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா.. 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா..

பத்தாம் வகுப்பு தேர்வை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்க கூடாது. பொது முடக்க காலத்திலேயே 10ம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்.இதுபோன்ற சூழலில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

எனவே, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூன். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத் துறை இணை இயக்குனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தேர்வுத்துறை கண்காணிப்பாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, தேர்வு பணியை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.