கொரோனா தீவிரமாக பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் லேசான மற்றும் மிதமான பாதிப்புடைய கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) பயன்படுத்தலாம், தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் 60 வயதுக்கு குறைவான லேசான பாதிப்புள்ள நோயாளிகளில், அதிக உடல்நல பிரச்சனையுடையவர்களுக்கு, அதாவது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நீடித்த நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் நோய், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் உடல்பருமன் பிரச்னை உடையவர்களுக்கு தீவிர மருத்துவ மேற்பார்வையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்த வேண்டும்.

மிதமான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனைக்குப் பின்பே ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டும். இது தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவ பரிந்துரை இல்லாமல், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பிற்கு உகந்தது ஃபேவிபிராவிர் மாத்திரை- DGCI ஒப்புதல்