ஹிஜாப் தொடர்பான வழக்கில், கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து, வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஒரே சீருடை சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த வாரத்தில் மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவிகள் 6 ஆம் நாளாக நேற்றும் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’என முழக்கம் எழுப்பியதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலோர கர்நாடகாவில் தொடங்கிய இந்த போராட்டம் நேற்று பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. இதற்கிடையே நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடரபாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது செய்துள்ள சத்தியத்தின்படி நடப்பேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாணவர் சமூகம் அமைதியைப் பேண வேண்டும் என்று கூறி வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, இன்று (9.2.2022) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விஷயங்கள் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த சில அரசியலமைப்பு கேள்விகளை எழுப்புகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளின் விவாதத்தை கருத்தில் கொண்டு, வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரர்களில் ஒருவருக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “இந்த விவகாரம் கூடுதல் அமர்வுக்கு மாற்றப்படும் முன் நிவாரணமாக சீருடைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய மாணவர்களை ஒதுக்காதீர்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மாணவியும் கல்வியை இழக்காமல் இருக்கும் வழி குறித்து யோசிக்க வேண்டும். அதைவிட மிக முக்கியமாக அமைதி திரும்ப வேண்டும். எனவே, கர்நாடக அரசின் சீருடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டார்.